ஈரோட்டில் மகாவீர் ஜயந்தி உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதில் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஊர்வலம் சென்றனர்.
சமண சமயத்தின் 24ஆவது தீர்த்தங்கரராகிய மகாவீரரின் பிறந்த தினத்தை மகாவீர் ஜயந்தியாக ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அஹிம்சையே தர்மம், எந்த ஜீவனையும் கொல்லக்கூடாது, எவரையும் சார்ந்திருக்க கூடாது, எவரையும் அடிமைப்படுத்தக்கூடாது போன்ற மகாவீரர் அறிவுறுத்திய சமத்துவக் கொள்கையை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் இந்த விழா கொண்டாடப்படுகிறது.
ஈரோட்டில் வாழும் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் சார்பில் மகாவீர் ஜயந்தி உற்சாகமாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி ஈரோடு பிரப் சாலை தெப்பக்குளம் வீதியில் உள்ள ஜெயின் கோயிலில் புதன்கிழமை காலை வட மாநிலத்தினர் திரண்டனர். அங்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
அதன் பின்னர் விழாவை கொண்டாடும் விதத்தில் ஊர்வலம் சென்றனர். ஜெயின் கோயிலில் இருந்து தொடங்கிய ஊர்வலம் பிரப் சாலை, காமராஜர் சாலை, ஈஸ்வரன் கோயில் வீதி, தெப்பக்குளம் வீதி வழியாக மீண்டும் ஜயின் கோயிலில் நிறைவடைந்தது. இதில் பெண்கள் உள்பட பக்தர்கள் பலர் திரளாக கலந்துகொண்டனர். அப்போது அவர்கள் பக்தி முழக்கங்களை எழுப்பியவாறு நடந்து சென்றனர்.