ஈரோடு மாவட்டம், தெங்குமரஹாடா கிராமத்துக்கு குறுக்கே செல்லும் மாயாறு வழியாக வேனில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்டன.
நீலகிரி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட பவானிசாகர் வனப் பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அடர்ந்த வனப் பகுதியில் தெங்குமரஹாடா, அல்லிமாயாறு, கல்லாம்பாளையம் ஆகிய மூன்று வனக் கிராமங்கள் உள்ளன. இந்த 3 கிராமங்களிலும் 1,200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்கிராமங்களுக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டும் 2 அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த கிராமங்களுக்கு மாயாற்றைக் கடந்துதான் செல்ல வேண்டும்.
இந்நிலையில் மக்களவைத் தேர்தலையொட்டி, தெங்குமரஹாடாவில் இரண்டு, கல்லாம்பாளையத்தில் ஒன்று என மொத்தம் மூன்று வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த வாக்குச் சாவடி மையங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள், விவி பேட் இயந்திரம் மற்றும் வாக்குச் சாவடியில் பயன்படுத்தப்படும் பொருள்கள் ஆகியவற்றை குன்னூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து கோத்தகிரி வட்டார வளர்ச்சி அதிகாரியும், மண்டல அலுவலருமான நாகராஜ் தலைமையில் அலுவலர்கள் ஜீப், வேன் ஆகிய 2 வாகனங்களில் புதன்கிழமை எடுத்துச் சென்றனர்.
இதில் மாயாற்றைக் கடந்தபோது வேனின் சைலன்சரில் திடீரென தண்ணீர் புகுந்து ஆற்றின் கரையில் நகரமுடியாமல் நின்றது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பாதுகாப்பாக வாகனம் வாக்குச் சாவடிக்கு சென்றது.
மொடக்குறிச்சியில்...
மொடக்குறிச்சி, ஏப். 18: மொடக்குறிச்சி தொகுதிக்குள்பட்ட அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாகனங்கள் மூலம் பாதுகாப்புடன் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.
மொடக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்துக் கட்சியினர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் மொடக்குறிச்சி தொகுதியில் 275 வாக்குச் சாவடி மையங்களுக்கு அனுப்பும் பணி புதன்கிழமை நடைபெற்றது. 15- க்கும் மேற்பட்ட லாரிகளில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கபட்டன. வாக்குச் சாவடிகளுக்கு எடுத்துச் செல்லபட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாகவும், பணியில் இருக்கும் அலுவலர்கள் உஷாராக இருக்கும்படியும் மொடக்குறிச்சி தேர்தல் உதவி அலுவலர்கள் சங்கர் கணேஷ், சேகர், அசரபுனிசா ஆகியோர்
அறிவுறுத்தினர்.