சீரான குடிநீர் வழங்கக் கோரி அந்தியூர் அருகே பொதுமக்கள் சாலை மறியல்
By DIN | Published On : 22nd April 2019 08:49 AM | Last Updated : 22nd April 2019 08:49 AM | அ+அ அ- |

அந்தியூர் அருகே சீரான குடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அந்தியூரை அடுத்த பச்சாம்பாளையம் பகுதியில் 200 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதிக்கு இரு வாரங்களுக்கு மேலாக முறையாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால், பொதுமக்கள் தண்ணீர் தேவைக்காக நாள்தோறும் சிரமப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலிக் குடங்களுடன் அந்தியூர் அம்மாபேட்டை சாலையில் பச்சாபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அந்தியூர் போலீஸார் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும், சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதியளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.