பவானிசாகர் அருகே தோட்டத்துக்கள் புகுந்த ஒற்றை யானையால் வாழை மரங்கள் சேதம்
By DIN | Published On : 22nd April 2019 08:52 AM | Last Updated : 22nd April 2019 08:52 AM | அ+அ அ- |

பவானிசாகர் அருகே தோட்டத்துக்குள் ஞாயிற்றுக்கிழமை புகுந்த ஒற்றை காட்டு யானை அங்கு பயிரிடப்பட்டிருந்த 50 க்கும் மேற்பட்ட வாழை மரங்களை சேதப்படுத்தின.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள விளாமுண்டி வனப் பகுதியில் 20 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. தற்போது, வனப் பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் யானைகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி இரவு நேரத்தில் வனப் பகுதியை விட்டு வெளியேறி கிராமங்களில் நுழைந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள வாழை, கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை சேதம் செய்து வருகின்றன.
பவானிசாகர் பகுதியில் ஒற்றை காட்டு யானை ஒன்று கடந்த ஒரு வார காலமாக தினமும் இரவில் வாழைத் தோட்டங்களுக்குள் புகுந்து வாழை மரங்களை சேதப்படுத்தி வருகின்றன. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பவானிசாகர் போலீஸ் குடியிருப்பு அருகே உள்ள விவசாயி துரைசாமி என்பவரது தோட்டத்துக்குள் புகுந்த ஒற்றை யானை அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த 50 க்கும் மேற்பட்ட ஜி 9 ரக வாழை மரங்களை சேதப்படுத்தின.
இதையடுத்து, வனத் துறையினர் பட்டாசு வெடித்து யானை விரட்ட முயற்சித்தும் வாழைத் தோட்டத்தை விட்டு நகராமல் வாழை மரங்களை சேதப்படுத்தியபின் அதிகாலை 5 மணியளவில் வனப் பகுதிக்குள் சென்றது.
இப்பகுதியில் தொடர்ச்சியாக ஒற்றை யானை அட்டகாசம் செய்து வருவதால் அந்த யானையை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வனத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சேதமடைந்த வாழை மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்