பவானிசாகர் நால்ரோடு அருகே யானை தாக்கியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தார். மனநலம் பாதிக்கப்பட்ட பெண் காயமடைந்தார்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த பவானிசாகர் நால்ரோட்டில் இருந்து புன்செய் புளியம்பட்டி செல்லும் சாலையில் யானைகள் தண்ணீர் தேடி சாலையைக் கடந்து செல்வது வழக்கம். இந்நிலையில் தண்ணீர் தேடி வந்த ஒற்றை பெண் யானை சாலையோரம் நின்று தீவனம் தின்று கொண்டிருந்தது. பின்னர்
அந்த யானை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகளைத் துரத்தியது. அப்போது யானையிடம், நால்ரோட்டைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி குமார் (27), மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஆகியோர் சிக்கிக்கொண்டனர். இதில் குமாரை யானை தூக்கி வீசியதில் தலையில் பலத்த காயமடைந்தார். யானை தாக்கியதில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணும் காயமடைந்தார். காயமடைந்த இருவரையும் மீட்க சத்தியமங்கலத்தில் இருந்து சென்ற ஆம்புலன்ஸ் ஊழியர்களை யானை துரத்தியது. இருப்பினும் யானையிடமிருந்து இருவரையும் மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குமார் உயிரிழந்தார். மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.