ஆடி வெள்ளியை ஒட்டி அம்மன் கோயில்களில் சிறப்பு அபிஷேக, அலங்கார வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுவது வழக்கம். இதையொட்டி, ஈரோடு பெரிய மாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, அம்மனுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஈரோடு, கருங்கல்பாளையம் ஜெயகோபால் வீதியில் உள்ள தேவி கருமாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு வளையல்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வழிபாடுகள் நடத்தப்பட்டன. ஈரோடு, சத்தி சாலை எல்லை மாரியம்மனுக்கு, மகாலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டது. ஈரோடு, வீரப்பன்சத்திரம் சுக்கிரகவுண்டன்வலசு மகாமாரியம்மன் கோயிலில் அம்சவாகினி வித்யாம்பிகை அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.
ஈரோடு, சூளை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் அம்மனுக்கு வளையல் காப்பு அலங்காரமும், ஈபிபி நகரில் சக்தி மாரியம்மனுக்கு நவதானியங்கள் அலங்காரமும் செய்யப்பட்டது. ஈரோடு, கருங்கல்பாளையம் கமலா நகரில் சமயபுரம் மாரியம்மன், வீரப்பன்சத்திரம் மாரியம்மன், கள்ளுக்கடைமேடு கொண்டத்து பத்ரகாளியம்மன், பெரியவலசு வேப்பமரத்து மாரியம்மன் உள்பட அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
பவானி தேவபுரம் கருமாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு வளையல் அலங்காரமும், செல்லியாண்டியம்மனுக்கு ரூபாய் நோட்டுகள் அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது. ஆடி வெள்ளியை ஒட்டு ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.