பவானிசாகர் அணையின் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக அணையின் நீர்மட்டம் 84 அடியை எட்டியது.
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த ஜூன் மாதம் பெய்ய வேண்டிய பருவ மழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால் அணையில் நீர் இருப்பு குறைந்து வந்தது.
இந்நிலையில், பவானிசாகர் அணையின் நீர்ப் பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப் பகுதி மற்றும் வடகேரளத்தில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் பலத்த மழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் பவானி, மாயாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இதன்காரணமாக அணையின் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை 6 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து ஒரு லட்சத்து 1,038 கனஅடியாக இருந்தது. அணையின் நீர்மட்டம் 84.30 அடியாகவும், நீர் இருப்பு 18.07 டிஎம்சியாகவும் உள்ளது.
அணையில் இருந்து குடிநீர்த் தேவைக்காக பவானி ஆறு, கீழ்பவானி வாய்க்காலில் 205 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை காலை அணையின் நீர்மட்டம் 70 அடியாக இருந்த நிலையில் வெள்ளிக்கிழமை 82 அடியை எட்டியது.
ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 14 அடி உயர்ந்துள்ளதோடு 6 டிஎம்சி தண்ணீர் அணைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வெள்ளிக்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 84.30 அடியாகவும், நீர்வரத்து 45 ஆயிரத்து 761 கனஅடியாகவும், நீர் இருப்பு 18.07 டிஎம்சி ஆக உள்ளது.