ஈரோட்டில் ரயில் மறியலில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் உள்பட 82 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட 370 சட்டப் பிரிவை ரத்து செய்த மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தப் போராட்டத்துக்கு தமுமுக ஈரோடு கிழக்கு மாவட்டச் செயலர் சித்திக் தலைமை வகித்தார். மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலர் சலீம், தமுமுக மாவட்டச் செயலர் ஜாஹிர் உசேன் முன்னிலை வகித்தனர்.
கோரிக்கைகளை விளக்கி பழனி பாரூக் பேசினார். தொடர்ந்து, காளை மாட்டு சிலை அருகில் இருந்து ஊர்வலமாகச் சென்று ரயில்நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். இதையடுத்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 82 பேரைக் கைது செய்தனர்.