நூற்பாலைத் தொழிலாளி கொலை செய்யப்பட்டார்.
ஈரோடு மாவட்டத்துக்குள்பட்ட பவானியை அடுத்த குருப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் அய்யண்ணன் மகன் கனகராஜ் (48). கருத்து வேறுபாடு காரணமாக மனைவி கஸ்தூரியை பிரிந்த கனகராஜ், கடந்த ஓராண்டாக குமாரபாளையத்தில் உள்ள நூற்பாலையில் வேலை செய்து வந்தார். நூற்பாலைக்குச் சொந்தமாக, ராகவேந்திரா வீதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்தார்.
இந்நிலையில், தங்கும் விடுதிக்கு நூற்பாலை மேலாளர் அன்பரசு செவ்வாய்க்கிழமை காலை சென்றபோது பலத்த காயங்களுடன் கனகராஜ் உயிரிழந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது. கனகராஜுடன் அறையில் தங்கியிருந்த பொள்ளாச்சியைச் சேர்ந்த அழகேசனை காணவில்லை. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த குமாரபாளையம் போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். நாமக்கல்லிருந்து மோப்பநாய் சிம்மா வரவழைக்கப்பட்டது, சுமார் 2 கி.மீ. தொலைவுக்கு மோப்பம் பிடித்தபடி சென்ற நாய், குமாரபாளையம் காவிரி ஆற்றின் பழைய பாலம் வரை ஓடி நின்றது. தடய அறிவியல் துறையினரும் கொலை நடந்த அறையில் கைரேகைகளைப் பதிவு செய்தனர். சம்பவ இடத்தில் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு, நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இதுகுறித்து, குமாரபாளையம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.