மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில், நம்பியூர் குமுதா பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பிடித்துள்ளனர்.
ஈரோடு மாவட்ட தடகளச் சங்கத்தின் சார்பில், மாவட்ட அளவில் இளையோருக்கான தடகளப் போட்டிகள் ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதுமிருந்து 75 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து சுமார் 1,500 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
போட்டியில், 16 வயதுக்கு உள்பட்ட ஆண்களுக்கான தடகளப் போட்டியில் குமுதா பள்ளியில் 10 ஆம் வகுப்பு மாணவர் பு.மெய்க்கவியரசு 400, 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் இரண்டாமிடம் பெற்றார். 11 ஆம் வகுப்பு மாணவர் கவின் 1,000 மீட்டர் ஓட்டத்தில் மூன்றாமிடம் பெற்றார்.
18 வயதுக்கு உள்பட்ட ஆண்களுக்கான தடகளப் போட்டியில் 11 ஆம் வகுப்பு மாணவர் அனுதீப் 800 மீட்டர் ஓட்டத்தில் இரண்டாமிடமும், 12 ஆம் வகுப்பு மாணவர் ஸ்ரீ கிருஷ்ணா 400 மீட்டர் ஓட்டத்தில் மூன்றாமிடமும் பெற்றனர்.
பெண்களுக்கான பிரிவில், 10 ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீவைஷ்ணவி 1,000 மீட்டர் ஓட்டத்தில் இரண்டாமிடமும், 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஊ.சுவாதி 800 மீட்டர் ஓட்டப் போட்டி, ஈட்டி எறிதலில் இரண்டாமிடமும், 11 ஆம் வகுப்பு மாணவி கிருத்திகா ஈட்டி எறிதலில் மூன்றாமிடமும் பெற்றனர்.
குமுதா பள்ளியின் மாணவ, மாணவிகள் 6 வெள்ளி, 3 வெண்கலம் உள்பட 9 பதக்கங்களை பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி சார்பில் பாராட்டி புதன்கிழமை பரிசு வழங்கப்பட்டது. பள்ளித் தாளாளர் கே.ஏ.ஜனகரத்தினம், இணைத் தாளாளர் சுகந்தி, செயலாளர் டாக்டர் அரவிந்தன், இணைச் செயலாளர் டாக்டர் மாலினி, முதல்வர் மஞ்சுளா, தலைமையாசிரியர் வசந்தி, ஆசிரியர்கள் பாராட்டினர்.