மக்கள் பிரச்னைகளைக் கூறவும், அதனைத் தீர்க்கும் நடவடிக்கை குறித்தும் நேரடித் தொடர்பு ஏற்படுத்தும் வகையில் திருப்பூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் அலுவலகம் அந்தியூரில் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட பெருந்துறை, அந்தியூர், பவானி, கோபி ஆகிய நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. திருப்பூர் மக்களவைத் தொகுதி உறுப்பினராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளராக உள்ள கே.சுப்பராயன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து, சட்டப்பேரவைத் தொகுதிகள் தோறும் திருப்பூர் மக்களவை உறுப்பினர் அலுவலகம் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அந்தியூர் சட்டப்பேரவைத் தொகுதி மக்களின் குறைகளைக் கேட்டறியும் வகையில் அலுவலகம் திறக்கப்பட்டது. திமுக ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் என்.நல்லசிவம் அலுவலகத்தைத் திறந்து வைத்தார். திருப்பூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் கே. சுப்பராயன் தலைமை வகித்தார். காங்கிரஸ் ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் சரவணன், திமுக ஒன்றியச் செயலாளர் ஏ.ஜி.வெங்கடாசலம், சிபிஐ மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் வி.பி.குணசேகரன், சிபிஎம் வட்டச் செயலாளர் முருகேசன், மதிமுக ஒன்றியச் செயலர் ராமன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் எஸ்.குருசாமி, கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.
முன்னதாக, பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிபிஐ நிர்வாகிகள் அப்புசாமி, பர்கூர் கணேஷ், நிர்வாகிகள் செய்திருந்தனர்.