மொடக்குறிச்சியை அடுத்த அறச்சலூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் மூதாட்டியிடம் நகையைப் பறித்து சென்றனர்.
மொடக்குறிச்சி தாலுகா, அறச்சலூர் பேரூராட்சிக்கு உள்பட்ட தேவனம்பாளையத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவரது மனைவி சிவகாமி (70). ஈரோடு செல்வதற்காக அறச்சலூர் கைகாட்டி பிரிவில் பேருந்துக்காக சிவகாமி செவ்வாய்க்கிழமை நின்று கொண்டிருந்தார்.
அப்போது அடையாளம் தெரியாத இரண்டு மர்ம நபர்கள் ஹெல்மெட் அணிந்துகொண்டு இருசக்கர வாகனத்தில் வந்து சிவகாமியின் கழுத்தில் இருந்த ஐந்தரை பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து அறச்சலூர் போலீஸில் சிவகாமி புகார் அளித்தார்.
புகார் மீது நடவடிக்கை எடுத்த அறச்சலூர் போலீஸார் சிசிடிவி கேமராவில் பதிவான படங்களை வைத்து தேடி வருகின்றனர் .