ஈரோடு மாவட்டத்தில் காவல் துறையில் அறிமுகப்படுத்தப்பட்ட லேடீஸ் பர்ஸ்ட் திட்டத்தின் மூலம் வரப்பெற்ற 695 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.சக்திகணேசன் கூறியதாவது:
ஈரோடு மாவட்ட காவல் துறையில் பெண்களுக்கு உதவும் நோக்கில் லேடீஸ் பர்ஸ்ட் என்ற திட்டம் மே 11ஆம் தேதி துவங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட பெண்கள் 96552-20100 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம். இந்த புகார்கள் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இத்திட்டத்தின்கீழ் கடந்த 4 மாதங்களில் 695 அழைப்புகள் பெறப்பட்டுள்ளன. இதில், 46 அழைப்புகளின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தும், 248 அழைப்புகளின் மீது மனு ரசீது பதிவு செய்தும், இதர புகார்கள் மொத்தம் 652 அழைப்புகளின் மீது முறையாக நடவடிக்கை எடுத்தும் தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள 43 அழைப்புகளின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பெண்களின் குறைகளைத் தீர்க்கும் வகையில் துவங்கப்பட்ட லேடீஸ் பர்ஸ்ட் திட்டம் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளளது.
இத்திட்டத்தை பாதிக்கப்பட்ட பெண்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.