பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் ரூ. 2.10 லட்சம் மானியம்: தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 16th August 2019 06:41 AM | Last Updated : 16th August 2019 06:41 AM | அ+அ அ- |

பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் ரூ. 2.10 மானியம் பெற நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில், ஈரோடு மாவட்டத்தில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். தகுதியான பயனாளிகள், தாங்கள் வசிக்கும் இடத்தில் 300 சதுரடி பரப்பில் கான்கிரீட் வீடு கட்டிக் கொள்ள வேண்டும். அதற்கு மானியமாக ரூ. 2.10 லட்சம் பயனாளியின் வங்கிக் கணக்கில், நான்கு தவணைகளாக நேரடியாக வரவு வைக்கப்படும்.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி எல்லைக்கு உள்பட்பட்ட பகுதியில் சொந்த இடத்தில் குடிசை வீடு, ஓட்டு வீடு அல்லது காலி மனை வைத்திருப்பவராக இருக்க வேண்டும். பயனாளியின் பெயரில் பட்டா அல்லது பத்திரம் வைத்திருக்க வேண்டும்.
பயனாளிகள் குடும்ப ஆண்டு வருவாய் ரூ. 3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். பயனாளியின் பெயரில் அல்லது பயனாளியின் குடும்பத்தாரின் பெயரில் வேறு வீடு இருக்கக் கூடாது. தகுதி வாய்ந்த நபர்கள், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வங்கி கணக்குப் புத்தகம், பட்டா, பத்திரம் ஆகியவற்றின் நகல்களை அளிக்க வேண்டும்.
விண்ணப்பத்தை உதவி நிர்வாகப் பொறியாளர் அலுவலகம், முதல் தளம், பிரகாஷ் காம்ப்ளக்ஸ், கவுந்தப்பாடி சாலை, சித்தோடு என்ற முகவரியில் அளிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு 86680-05607, 88255-38131 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.