ஆடு வளர்ப்புக்கு மானியத்துடன் கடனுதவி பெற தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி என்.கிருஷ்ணராஜ் தெரிவித்ததாவது: ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு இணைக்கப்பட்டுள்ள 227 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம், நபார்டு வங்கியின் தேசிய கால்நடை திட்டத்தின்கீழ் வெள்ளாடு வளர்ப்பு, செம்மறி ஆடு வளர்ப்புக்கு மானியத்துடன் கூடிய மத்திய கால முதலீட்டுக் கடன்கள் வழங்கப்படுகின்றன.
பொதுப் பிரிவினருக்கு 25, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 33.33 சதவீதம் மானியம் வழங்கப்படும். இத்திட்டத்துக்கான மானியம் குறுகிய காலத்தில் முடிவடைந்துவிடும் என்பதால் விவசாயிகள் விரைவில் அருகிலுள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களைத் தொடர்பு கொண்டு கடன் பெற்று பயனடையலாம் என்றார்.