தீவிரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கை காரணமாக, தமிழக - கர்நாடக எல்லையான ஆசனூர், பண்ணாரி சோதனைச் சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கையில் குண்டு வெடிப்பு நிகழ்த்திய முஸ்லிம் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கோவையில் ஊடுருவியிருப்பதாக தமிழக காவல் துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், தமிழகம் முழுவதும் முக்கியப் பகுதிகளில் உள்ள கோயில்கள், தேவாலயங்கள், ரயில்நிலையம், மாநில எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் தீவிர தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், திண்டுக்கல் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தமிழக - கர்நாடக மாநில எல்லையில் அமைந்துள்ள பண்ணாரி சோதனைச் சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் நோக்கி வரும் கார் உள்ளிட்ட வாகனங்களின் பதிவு எண்கள், எங்கிருந்து எங்கு செல்கின்றனர் என்ற விவரத்தை சேகரிப்பதோடு வாகனங்களில் உள்ள பொருள்களைத் தீவிரமாக சோதனையிட்டு வருகின்றனர்.