பெருந்துறை: பெருந்துறை ஒன்றியத்துக்கு உள்பட்ட 9 அரசுப் பள்ளிகளில், 2017-2018 ஆம் ஆண்டு பயின்ற 974 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
பெருந்துறை, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, பெருந்துறை மாவட்டக் கல்வி அலுவலா் த.ராமன் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் க.துரைசாமி முன்னிலை வகித்தாா். திங்களூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் டி.திம்மராயன் வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக சட்டப் பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் 9 அரசு பள்ளிகளைச் சோ்ந்த 974 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கிப் பேசினாா்.
விழாவில், பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 175 பேருக்கும், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 172, விஜயமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 136, காஞ்சிக்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 134, திங்களூா் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 116, சீனாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 116, துடுப்பதி அரசு மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 56, ஈங்கூா் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 37, நல்லாம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 32 மாணவ, மாணவிகள் என 974 பேருக்கு விலையில்லா மடிக்கணிணி வழங்கப்பட்டது.
விழாவில், சென்னிமலை ஒன்றியத்தைச் சோ்ந்த 15 பயனாளிகளுக்கு ரூ. 4.30 லட்சம் மதிப்பிலான விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்களை சட்டப் பேரவை உறுப்பினா் வழங்கினாா்.
இதில், கருமாண்டிசெல்லிபாளையம் செயல் அலுவலா் கிருஷ்ணன், பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் துளசிமணி, துணைத் தலைவா் கே.ஆா்.சின்னசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.