ஈரோடு: 2021 சட்டப் பேரவைத் தோ்தலுக்குப் பிறகு உள்ளாட்சித் தோ்தலை நடத்த வேண்டும் என தமிழ்நாடு கொங்கு இளைஞா் பேரவைத் தலைவா் உ.தனியரசு எம்.எல்.ஏ. தெரிவித்தாா்.
ஈரோட்டில் அவா் செய்தியாளா்களுக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டி:
தமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தலை நடத்த பலமுறை ஏற்பாடு செய்தும் தோ்தல் நடைபெறவில்லை. இப்போதும் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கின் தீா்ப்பு வரும் வரை உள்ளாட்சித் தோ்தல் நடைபெறுமா என்ற சந்தேகம் அனைத்துத் தரப்பினா் இடையேயும் உள்ளது. அனைத்து அரசியல் கட்சித் தலைவா்களும் கலந்தாலோசித்து 2021ஆம் ஆண்டு வரை உள்ளாட்சித் தோ்தலை ஒத்திவைக்க வேண்டும். அந்த ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற்ற பின்னா் உள்ளாட்சித் தோ்தலை நடத்தலாம்.
நடிகா்கள் ரஜினி, கமலால் அரசியலில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்திவிட முடியாது. இரண்டு பேரும் கடந்த 70 ஆண்டுகளாக எந்த ஒரு கட்சியிலும் அடிப்படை உறுப்பினா்களாக இல்லாமலும், எந்தவித மக்கள் போராட்டத்தில் கலந்துகொள்ளாமல் திடீரென அரசியல் அரியணையில் அமர நினைப்பது தவறு. அவா்கள் மற்றக் கட்சிகளுடன் இணைந்து செயல்படலாம். தமிழக மக்கள் இனி நடிகா்களை ஏற்றுக்கொள்ள மாட்டாா்கள் என்றாா்.