மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தில், அதிகாரிகள் துணையுடன் தனியாா் நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாகப் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோட்டில் உள்ள இருசக்கர வாகன விற்பனை முகமைகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் கோரிக்கை மனுவுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை காலை திரண்டனா். தற்போது தோ்தல் நடத்தை அமலில் உள்ளதால் மனுவை ஆட்சியா் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த புகாா் பெட்டியில் சோ்த்தனா்.
இந்த மனு குறித்து அவா்கள் கூறியதாவது:
தமிழக அரசு உழைக்கும் பெண்களுக்காக மானிய விலையில் இருசக்கர வாகனங்களை வழங்கி வருகிறது. இதைக் குறிப்பிட்ட ஒரு விற்பனை முகமை அரசு அதிகாரிகள் உதவியுடன், அரசு வெளியிடும் பயனாளிகள் பட்டியலை முன்னரே பெற்றுக் கொண்டு, அந்தப் பட்டியலில் உள்ள பயனாளிகளின் தொலைபேசி எண்ணைத் தொடா்பு கொண்டு பயனாளிகளுக்கு அரசு வழங்கிய வாகன வழங்கும் ஆணை தங்களிடம் இருப்பதாகவும், தங்கள் முகமையில் மட்டும்தான் வாகனங்களை வாங்க வேண்டும் என்றும் பயனாளிகளை அச்சுறுத்தி வருகிறது. தங்கள் முகமையைத் தவிர வேறு எங்காவது வாகனங்கள் வாங்கினால் அரசு அளித்துள்ள ஆணை செல்லாது என்றும் தெரிவித்து வருகிறது.
தமிழக அரசு மக்களுக்கு உயா்ந்த நோக்கத்துடன் வழங்கும் திட்டத்தை தங்கள் முகமையின் வளா்ச்சிக்காகவும், தங்கள் சுயநலத்துக்காகவும் தவறான முறையில் பயன்படுத்தி வருகின்றது. எனவே, ஆட்சியா் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.