மொடக்குறிச்சி அருகே பேருந்தில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவர் இறந்தார்.
மொடக்குறிச்சியை அடுத்த எழுமாத்தூர் கனககிரிமலை அடிவாரத்தில் பாரதியார் பல்கலைக் கழக கலை அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் சுமார் 3ஆயிரம் மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர்.
இக்கல்லூரி ஈரோடு - முத்தூர் மெயின்ரோட்டில் எழுமாத்தூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் 2கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
கல்லூரி செல்ல போதுமான போக்குவரத்து வசதி இல்லாததால், கல்லூரி சார்பில் பேருந்து ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. இதில் மாணவ, மாணவியர் சென்று வந்தனர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை கல்லூரி முடிந்து இந்தப் பேருந்து எழுமாத்தூருக்குப் புறப்பட்டது.
கூட்ட நெரிசலால் பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்த முதலாமாண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவரான தாராபுரம் அடுத்த வாழநாய்க்கன்வலசு பகுதியைச் சேர்ந்த நடராஜ் என்பவரது மகன் பிரதீப் (18) படிப்பாறை என்ற இடத்தில் வரும்போது பேருந்தில் இருந்து தவறி விழுந்தார். படுகாயம் அடைந்த மாணவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே மாணவர் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இந்த விபத்து குறித்து மொடக்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.