மொடக்குறிச்சி அருகே பெண்ணிடம் இருந்த ரூ.49 ஆயிரத்தை பறித்துச் சென்ற இருவரை பொதுமக்கள் கையும் களவுமாகப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். தப்பியோடிய மற்றொருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
மொடக்குறிச்சி, தூரபாளையம் அண்ணா புதுக்காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி துளசிமணி (55), நெசவுத் தொழிலாளி. இவர்கள் இருவரும் லக்காபுரத்தில் உள்ள தங்கள் மகனுக்கு பணம் கொடுப்பதற்காக மொடக்குறிச்சி நான்கு ரோட்டில் பேருந்தில் ஏறி உள்ளனர். இதைக் கண்காணித்த 3 மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் பேருந்தை பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.
துளசிமணியும், அவரது கணவரும் லக்காபுரம் பேருந்து நிறுத்தத்தில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு இறங்கி நடந்து சென்றுகொண்டிருந்தபோது பின்னால் வந்த மர்ம நபர்கள் அவர்கள் வைத்திருந்த ரூ. 49 ஆயிரத்தை பணப்பையுடன் பறித்துக் கொண்டு ஓடினர். இதையடுத்து துளசிமணி சப்தமிடவே அருகில் இருந்தவர்கள், பணத்தை பறித்துச் சென்ற மூவரில் இருவரைப் பிடித்து மொடக்குறிச்சி காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார்.
பிடிபட்ட இருவரிடமும் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் ஈரோடு, முத்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்தி (26), நவீன் (28) என்பதும், சகோதரர்களான இவர்கள் இருவரும் பெயிண்டிங் வேலைக்கு சென்றுவந்ததும் தெரியவந்தது. இருவரையும் கைது செய்து போலீஸார் சிறையில் அடைக்கப்பட்டனர். தப்பியோடிய இவர்களது நண்பரான சதீஷ் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.