மொடக்குறிச்சியை அடுத்த எழுமாத்தூர் கனககிரி மலையில் 108 கலசாபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
எழுமாத்தூர் கனககிரி மலையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு கனகாசலகுமரன் கோயிலில் ஆண்டுதோறும் கனகாசலக்குமரன் வார வழிபாட்டு மன்றத்தின் சார்பில் 108 கலசாபிஷேகம் நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு கலசாபிஷேக விழா விநாயகர் வழிபாட்டுடன் செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்கு தொடங்கியது. கனசாலகுமரனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்று பூஜைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து 108 கலசங்கள் வைத்து திரிசதை யாகம் நடைபெற்றது.
அதைத் தொடந்து கனகாசலகுமரனுக்கு பால், பன்னீர் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.