பவானியை அடுத்த மைலம்பாடி, மாணிக்கம்பாளையம் கிராமங்களில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டன.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் திறக்கப்பட்டுள்ள இக்கொள்முதல் நிலையங்களில் சன்ன ரக நெல் கிலோ ரூ. 18.40 க்கும், மோட்டோ ரக நெல் ரூ. 18 க்கும் கொள்முதல் செய்யப்படும். மேட்டூர் அணையின் மேற்குக்கரை பாசனப் பகுதியில் தற்போது அறுவடைக் காலம் தொடங்கியுள்ள நிலையில் விவசாயிகளிடமிருந்து நெல்லை விற்பனை செய்யும் வகையில் இக்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
மாணிக்கம்பாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கொள்முதல் நிலையத்தை மாணிக்கம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் எம்.பி.பாலசுப்பிரமணியம் திறந்துவைத்தார். நெல்லை விற்பனை செய்யும் விவசாயிகள், தங்கள் நிலத்தின் அடங்கல் நகல், கிராம நிர்வாக அலுவலரின் சான்று, வங்கியின் பாஸ்புக் ஆகியவற்றைக் கொண்டு வர வேண்டும். நெல்லுக்கான பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும் என கொள்முதல் அதிகாரி கே.தங்கராஜ் தெரிவித்துள்ளார்.