சத்தியமங்கலத்தை அடுத்த டி.ஜி.புதூர் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற மாட்டுப் பொங்கல் விழாவில் உடலில் கத்திபோட்டபடி அம்மன் அழைத்து வரும் நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
நெசவுத் தொழில் செய்து வந்த பக்தர் ஒருவரை அசூரர் தொந்தரவு செய்தபோது அசூரரை அழித்து நெசவாளியை ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் காப்பாற்றியதாகவும், அதனால் அம்மனுக்கு நேர்த்திக் கடனாக ரத்தத்தை காணிக்கையாக்கி ஊர்வலமாக அழைத்து வருவதாகவும் ஐதீகம்.
இதன்படி டி.ஜி.புதூர் சௌடேஸ்வரி அம்மன் ஆலயத்தில் இருந்து புதன்கிழமை புறப்பட்ட இளைஞர்கள் அலங்காரக் கத்தியுடன் உடலில் கத்திபோட்டபடி அம்மனை ஊர்வலமாக அழைத்து வந்தனர். முன்னதாக கோயில் முன் ஆயிரம் தேங்காய் உடைத்து விழாவை துவக்கி வைத்தனர். சிறுவர் முதல் பெரியோர் வரை உடலில் கத்திபோட்டு ரத்தம்சொட்டியபடி ஊர்வலத்தில் ஆட்டம் பாட்டத்துடன் வந்தனர்.
அதனைத் தொடர்ந்து சாலையில் படுத்துக் கொண்ட பக்தர்கள் வயிற்றில் வாழைக்காய் வைத்து வெட்டும் நிகழ்ச்சியும் அசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் டி.ஜி.புதூர் வட்டாரத்தில் உள்ள ஆயிரக்கணக்கானனோர் பங்கேற்றனர்.
ஈரோட்டில்...
ஈரோடு செளடேஸ்வரி அம்மன் கோயில் பொங்கல் திருவிழாவையொட்டி பக்தர்கள் கைகளில் கத்தி ஏந்தி ஆடி ஊர்வலமாகச் சென்று செவ்வாய்க்கிழமை நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.
ஈரோடு, தில்லை நகரில் உள்ள ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோயில் பொங்கல் திருவிழாவையொட்டி , அம்மன் அழைத்தல் நிகழ்ச்சியில் சுவாமி சொரூபம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.
ஈரோடு, காரைவாய்க்காலில் தொடங்கிய ஊர்வலத்தில் திரளான பெண்கள் தீர்த்தம் எடுத்து வந்தனர். ஊர்வலத்துக்கு முன்பு அந்தக் கோயிலுக்குப் பாத்தியப்பட்ட பக்தர்கள் கத்தி போட்டு ஆடியபடி வந்தனர். காரை வாய்க்கால், சின்னமாரியம்மன் கோயில், பன்னீர்செல்வம் பூங்கா, தெப்பகுளம் வீதி வழியாக வந்த ஊர்வலம் கோயிலில் நிறைவடைந்தது.
இதையடுத்து, சிறப்பு பூஜையும், அன்னதானமும், இரவு ராகுதீபம் ஏற்றும் நிகழ்ச்சியும், மாவிளக்கு ஊர்வலமும் நடைபெற்றன.