ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே வாய்க்காலில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவரை போலீஸார், தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த குத்தப்பட்டியைச் சேர்ந்தவர் சுந்தரராஜ். இவரது மகன் திவாகர் (20). இவர், பெருந்துறையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் தங்கி, 3 ஆம் ஆண்டு இயந்திரவியல் படித்து வருகிறார்.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் தனது நண்பர்களுடன் பெருந்துறை - ஈரோடு சாலையில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் குளிக்கச் சென்றபோது, காணாமல் போயுள்ளார்.
இதுகுறித்து, பெருந்துறை போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
பெருந்துறை தீயணைப்புத் துறை வீரர்கள் மாணவரைத் தேடி வருகின்றனர்.