ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நஞ்சை புளியம்பட்டி பகுதியில் செல்லும் பவானி ஆற்றில் குளித்த கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
திருப்பூர் புது பஸ்நிலையம் அருகே எம்.எஸ்.நகரில் வசித்து வருபவர் முருகேசன் மகன் தனசேகர் (18). இவர் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில், தனசேகர் தனது நண்பர்களுடன் நஞ்சை புளியம்பட்டி பகுதியில் உள்ள பவானி ஆற்றில் குளிப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளார். அப்போது, தனசேகர் தனது நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாரதவிதமாக ஆழமான பகுதிக்குச் சென்றுள்ளார்.
இதில் நீச்சல் தெரியாத காரணத்தினால் தண்ணீரில் இருந்து வெளியே வரமுடியாமல் தனசேகர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். உடனே அவரது நண்பர்கள் மற்றும் அருகில் இருந்தவர்கள் பங்களாபுதூர் போலீஸாருக்கும், கோபி தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த கோபி தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் மூழ்கிய மாணவர் தனசேகரின் உடலை கைப்பற்றினர். பின்னர் பிரேதப் பரிசோதனைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து பங்களாபுதூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.