ஈரோட்டில் வரும் ஆகஸ்ட் மாதம் நடக்க உள்ள ராணுவத்துக்கான ஆள் சேர்ப்புக்கு வரும் 8 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
சென்னை ராணுவ ஆள் சேர்க்கும் தலைமை செயலகம், கோவை ராணுவ ஆள் சேர்ப்பு அலுவலகம் மூலம் ராணுவ வீரர்களுக்கான ஆள் சேர்ப்பு முகாம் ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் ஆகஸ்ட் 22ஆம் தேதி முதல் செப்டம்பர் 2ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் பேசியதாவது:
ஈரோட்டில் நடக்க உள்ள ராணுவத்துக்கான ஆள் சேர்ப்பு முகாமில் ஈரோடு, நாமக்கல், கோவை, சேலம், தருமபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, மதுரை, தேனி, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கின்றனர்.
சோல்ஜர் டெக்னிக்கல், சோல்ஜர் அம்யூனிஷன்ஸ், ஏவியேஷன், சோல்ஜர் நர்ஸிங் அசிஸ்டென்ட், சோல்ஜர் ஜெனரல், சோல்ஜர் கிளார்க், ஸ்டோர் கீப்பர், சோல்ஜர் டிரேட்ஸ்மேன் உள்ளிட்ட பிரிவுகளுக்கு ஆள் சேர்ப்பு நடக்க உள்ளது.
நேர்காணல் மூலம் நடக்கும் இப்பணிக்கு, விருப்பம் உள்ளவர்கள், www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். நேர்காணல் ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை நடக்க உள்ளது. 8 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை தேர்ச்சி பெற்ற பதினேழரை வயது முதல் 23 வயதுக்குள்பட்டவர்கள் ஆகஸ்ட் 7 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றார்.