சித்தோடு அருகே இருப்பிடச் சான்றிதழ் வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட முயனற 34 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
ஈரோடு அருகே உள்ள பி.பெ.அக்ரஹாரம், அன்னை சத்யா நகரைச் சேர்ந்த 23 குடும்பத்தினர், சித்தோடு அருகே உள்ள கன்னிமார்காடு பகுதியில் குடிசைகள் அமைத்து கடந்த ஓராண்டுக்கு மேலாக வசித்து வருகின்றனர்.
இவர்கள், நிரந்தரமாக பட்டா பெறும் வகையில் இருப்பிடச் சான்று கேட்டு பலமுறை விண்ணப்பித்தும் சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனால், திராவிடர் பேரவை அமைப்பாளர் மாசிலாமணி பாபு தலைமையில் 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சித்தோடு கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.இதற்கு, போலீஸார் அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில், தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட ஊர்வலமாகச் சென்ற 29 பெண்கள் உள்பட 34 பேரை போலீஸார் கைது செய்தனர்.