அம்மாபேட்டையை அடுத்த மாத்தூரில் சீராக குடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள் காலிக் குடங்களுடன் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம், மாத்தூர் சிற்றூராட்சி, கிழக்கு மாத்தூர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, சிற்றூராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் பலமுறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால், கோபமடைந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெள்ளித்திருப்பூர் -அந்தியூர் சாலையில் கிழக்கு மாத்தூர் அருகே காலிக் குடங்களுடன் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் மற்றும் அதிகாரிகள் டிராக்டர் மூலம் குடிநீர் விநியோகிப்பதாகவும், ஆழ்குழாய் கிணற்றை ஆழப்படுத்தி சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.