நடமாடும் ஏடிஎம் வாகனத்தில் இருந்து திடீரென புகை வந்த நிலையில் இயந்திரத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ.9.55 லட்சம் பணம் மாயமான சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு பேருந்து நிலையத்தில் மக்கள் பயன்பாட்டுக்காக மாவட்ட கூட்டுறவு வங்கிக்குச் சொந்தமான நடமாடும் ஏடிஎம் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த வாகனத்தில் இருந்து வெள்ளிக்கிழமை பகலில் திடீரென புகை வந்தது. புகையைக் கட்டுப்படுத்திய ஊழியர்கள் வாகனத்தை மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமை அலுவலகத்துக்கு எடுத்துச் சென்றனர்.
வாகனத்தில் திடீரென புகை வந்ததால் இயந்திரத்தில் வைக்கப்பட்டிருந்த பண இருப்பை வங்கி அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, இயந்திரத்தில் இருந்து 4 பேர் மட்டும் ரூ.45,000 பணம் எடுத்திருந்த நிலையில் அதில் மீதம் இருக்க வேண்டிய ரூ.9.55 லட்சம் மாயமாகி இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து வங்கி சார்பில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் கருங்கல்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.