பயிர்க் காப்பீடு செய்ய கிராமம், பயிர் விவரம் அறிவிப்பு: கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை

பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் நடப்பு காரீப் 2019 பருவத்துக்கு ஈரோடு மாவட்டத்தில் கிராமம்

பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் நடப்பு காரீப் 2019 பருவத்துக்கு ஈரோடு மாவட்டத்தில் கிராமம் வாரியாக வேளாண் மற்றும் தோட்டக் கலை பயிர் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் விதைப்பு செய்ய இயலாமை, விதைப்பு பொய்த்து போதல், விதைப்பு முதல் அறுவடை வரை உள்ள காலத்திலும், அறுவடைக்கு பின் ஏற்படும் இழப்பு, புயல், மழை, ஆலங்கட்டி மழை, மண் சரிவு, வெள்ளம் போன்ற இடர்பாடுகளால் ஏற்படும் இழப்புக்கு காப்பீடு செய்யலாம்.
இதுகுறித்து வேளாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது: இந்த ஆண்டு முதல் ஈரோடு மாவட்டம் தொகுப்பு-6இன் கீழ் (குறைந்த பாதிப்புக்குரிய மாவட்டம்) என அறிவித்து ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் பயிர்க் காப்பீடு செய்யப்படவுள்ளது. நடப்பு காரீப் பருவத்துக்கு வேளாண் பயிர்களான மக்காசோளம், துவரை, உளுந்து, நிலக்கடலை ஆகியவை வருவாய் கிராம அளவிலும், ராகி, எள் ஆகிய பயிர்கள் பிர்கா அளவிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.தோட்டக்கலை பயிர்களில் வாழை, மரவள்ளி, வெங்காயம், மஞ்சள், வெண்டைக்காய், முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு, மா, கொய்யா ஆகிய பயிர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பிர்கா மற்றும் கிராம விவரங்களை அந்தந்த பகுதியில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தில் அறியலாம்.
வணிக வங்கி, தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி மூலம் பயிர்க் கடன் வாங்கும் விவசாயிகள் பதிவு செய்யப்படுவர். பயிர்க் கடன் பெறாத விவசாயிகள் மாவட்டத்தில் உள்ள இ-சேவை மையம் மூலம் வணிக வங்கி, தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி மூலம் பதிவு செய்யலாம்.
வேளாண் பயிர்கள், ஏக்கருக்கு, மக்காசோளம் ரூ.528, துவரை, உளுந்து பயிர் ரூ.311, நிலக்கடலை, ரூ.555, ராகி, எள் பயிர் ரூ.246 கட்டணம் ஆகும். தோட்டக்கலை பயிர்கள் ஏக்கருக்கு வாழை ரூ.4,021, மரவள்ளி ரூ.1,655, வெங்காயம் ரூ.1,885, மஞ்சள் ரூ.3,641, வெண்டைக்காய் ரூ.491, முட்டை கோஸ் ரூ.911, உருளை கிழங்கு ரூ.2,129, கொய்யா ரூ.1,087, மா ரூ.1,003 கட்டணம் ஆகும்.
நில ஆவணமான சிட்டா, அடங்கல், வங்கிக் கணக்கு புத்தக நகல், ஆதார் நகல், கிராம நிர்வாக அலுவலரிடம் பெறப்பட்ட விதைப்பு செய்ய இருக்கிறார் என்ற விதைப்புச் சான்று (விதைப்பு செய்ய இயலாமை, விதைப்பு பொய்த்து போதல்) ஆகியவற்றுடன் காப்பீடு செய்ய வேண்டும்.
இ-சேவை மையங்களில் ஆவணங்களை ஸ்கேன் செய்ய கூடுதல் தொகை வசூலிப்பதாக புகார் வருகிறது. அவ்வாறு வசூலித்தால் அந்த இ-சேவை மைய உரிமம் ரத்து செய்யப்பட்டு குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
வெண்டை பயிருக்கு வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள்ளும் மற்ற அனைத்துப் பயிர்களுக்கும் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள்ளும் காப்பீடு செய்ய வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com