கடைகளைக் காட்டிலும் கூட்டுறவு சங்கங்களில் குறைந்த விலையில் உரம் விற்பனை செய்யப்படுகிறது. இதனை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் மூலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் விவசாயிகள் பயனடையும் வகையில் குறைந்த விலையில் டிஏபி 10:26:26, 20:20:0:13 மற்றும் 12:32:16 ஆகிய உரங்கள் விற்பனை செய்யப்படுகிறது. கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் தடையின்றி இந்த உரங்களை பெறலாம். தற்போது மாவட்ட அளவில் பரவலாக மழை பெய்து வருவதால் வேளாண் பணிகளை விவசாயிள் பரவலாக தொடங்கியுள்ளனர். தற்போது இப்கோ நிறுவனம் மூலம் வழங்கப்படும் உரங்கள், வெளிச் சந்தையை விட குறைந்த விலையில் விற்கப்படுகிறது. தேவையான அளவு இருப்பும் உள்ளது. மூட்டைக்கு ரூ. 65 முதல் ரூ.150 வரை கூட்டுறவு சங்கங்களில் விலை குறைவாக இருப்பதால் விவசாயிகள் இதனை பயன்படுத்தி கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.