சத்தியமங்கலத்தை அடுத்த புஞ்சை புளியம்பட்டியில் பலத்த மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
புஞ்சை புளியம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில் சனிக்கிழமை மேகங்கள் திரண்டு, குளிர்ந்த காற்று வீசியது. சிறிது நேரத்தில் லேசாக தொடங்கிய மழை வலுவடைந்து, சுமார் ஒரு மணி நேரம் பலத்த காற்றுடன் கன மழையாக பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் இருசக்கர வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்க முடியாமல் சிரமத்துக்குள்ளாகினர்.
மழை பெய்ததால் அப்பகுதியில் மானாவாரியாக நிலக்கடலை விதைப்பு செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது. சத்தியமங்கலம், பவானிசாகர், பண்ணாரி, கடம்பூர் ஆகிய இடங்களிலும் சனிக்கிழமை இடியுடன் கூடிய மழை பெய்தது.
கோபியில்...
கோபிசெட்டிபாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக கடும் வெயில் வாட்டிவந்த நிலையில் சனிக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.
கோபிசெட்டிபாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளான மொடச்சூர், கரட்டடிபாளையம், குள்ளம்பாளையம், புதுப்பாளையம், பேருந்து நிலையம் பகுதி, வெள்ளாங்கோயில், குள்ளம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கால்நடைகளுக்கு தீவனமின்றியும், குடிநீர் பற்றாக்குறை நிலவி வந்த நிலையில் தற்போது பெய்துள்ள மழை விவசாயிகள், பொதுமக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.