மான் வேட்டையாடிய 4 பேருக்கு ரூ. 5 லட்சம் அபராதம்

பண்ணாரி வனப் பகுதியில் மான் வேட்டையாடிய 4 பேருக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.


பண்ணாரி வனப் பகுதியில் மான் வேட்டையாடிய 4 பேருக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பவானிசாகர் வனச் சரகத்துக்கு உள்பட்ட பண்ணாரி வனப் பகுதியில்  மர்ம நபர்கள் சிலர் மான் வேட்டையாடுவதாக பவானிசாகர் வனத் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனச் சரக அலுவலர் ஜான்சன் தலைமையில் வனப் பணியாளர்கள் சனிக்கிழமை ரோந்து சென்றனர்.
அப்போது வனப் பகுதியில் ஒரு கார் நின்றுகொண்டிருந்தது. மேலும் 4 பேர் கையில் துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்ததைக் கண்டு வனத் துறையினர் அவர்களை சுற்றி வளைத்துப் பிடித்தனர். அப்போது காரில் புள்ளிமானை வேட்டையாடி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து வேட்டைக்குப் பயன்படுத்தப்பட்ட இரட்டைக்குழல் துப்பாக்கி, மான் இறைச்சி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். 
விசாரணையில் மான் வேட்டையாடிய நபர்கள் நாமக்கல் மாவட்டம், நடந்தையைச் சேர்ந்த பூபதி (26), ஈரோடு, தாமரைப்பாளையம், ஊஞ்சலூரைச் சேர்ந்த கார்த்திக் (26), மொடக்குறிச்சி, பொன்னம்பாளையத்தைச் சேர்ந்த சதாசிவம் (36), கொடுமுடி, கருத்திப்பாளையத்தைச் சேர்ந்த ஸ்ரீதரன் (40) என்பது தெரியவந்தது. அவர்களை சத்தியமங்கலம் மாவட்ட வன அலுவலர் அருண்லால் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இதில் தலா ரூ.1.25 லட்சம் வீதம் 4 பேருக்கும் மொத்தம் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com