மேட்டூர் அணையின் மேற்குக்கரை பகுதியில் உள்ள கிளை வாய்க்கால்களை சீரமைக்க ரூ.ஒரு கோடியில் குடிமராமத்துப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
பொதுப் பணித் துறையின் நீர்வள ஆதாரத் துறை சார்பில் குடிமராமத்துப் பணி திட்டத்தில் நெரிஞ்சிப்பேட்டை, அம்மாபேட்டை மற்றும் பூதப்பாடி பகுதியில் 4 கிளை வாய்க்கால்களில் விவசாய சங்கங்கள் மூலம் தூர் வாருதல், கரையைப் பலப்படுத்துதல், மதகுகள் பழுது பார்த்தல், பழுதடைந்த பகுதிகளைச் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் ரூ.98.90 லட்சத்தில் மேற்கொள்ளப்படுகின்றன. அணையில் இருந்து பாசனத்துக்கு வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படும்போது தடையின்றி தண்ணீர் செல்லும் வகையில் இப்பணிகளை மேட்டூர் கால்வாய் உபகோட்ட உதவி செயற்பொறியாளர் பி.திருமூர்த்தி வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார்.
மேட்டூர் கால்வாய் பிரிவு உதவிப் பொறியாளர் எஸ்.சாமிநாதன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.