மொடக்குறிச்சியில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான கோழிக்குஞ்சு பொரிப்பகத்தில் சுகாதாரம் குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
மொடக்குறிச்சி காட்டுப்பாளையம் சாலை, மஞ்சக்காட்டுவலசு பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான கோழிக்குஞ்சு பொரிப்பகம் செயல்பட்டு வருகிறது. பொரிப்பகத்தில் இருந்து வெளியேறும் கழிவுகள், இறந்த குஞ்சுகள், கோழிக்கழிவுகள், முட்டைக் கழிவுகள் ஆகியவற்றை ஒரத்திப்பள்ளம் ஓடையில் கொட்டி வருவதாக புகார்கள் எழுந்தன.
இதனால் கடும் துர்நாற்றம் ஏற்படுவதுடன், ஓடையில் கோழிக் குஞ்சுகள் செத்து மிதப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கூறி அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்டு அண்மையில் போராட்டம் நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து கோழிக்குஞ்சு பொறிப்பக நிறுவனத்தில் சுகாதார வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கதிரவன் வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தினார். பின்னர் கழிவு நீர் ஓடையை பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து நிறுவன அதிகாரிகளிடம் கழிவுகளை ஓடையிலோ அல்லது பொதுஇடங்களிலோ கொட்டக் கூடாது, கழிவுகளை அழிக்கும் வகையில் நிறுவனத்துக்கு உள்பகுதியில் பிளான்ட் அமைத்து முற்றிலும் அழிக்க வேண்டும்.
மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
இந்த ஆய்வின்போது, மொடக்குறிச்சி வட்டாட்சியர் அசரபுனிஷா, வருவாய் வட்டாட்சியர் காயத்ரி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.