சத்தியமங்கலம் அருகே யானையைக் கொன்று மறைத்து வைக்கப்பட்ட தந்தங்களை வனத் துறையினர் பறிமுதல் செய்து கோபியில் உள்ள குற்றவியல் நீதித் துறை நடுவர் மன்றத்தில் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனர்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் மலைப்பகுதி, பராபெட்டா காப்புக்காடு புறம்போக்கு நிலத்தில் 20 வயது யானையைக் கொன்று அதன் தந்தத்தை திருடிய வழக்கில் கடம்பூர் மலைப்பகுதியைச் சேர்ந்த வீரன்(55), வெள்ளையன் (35), மூர்த்தி, சிவகங்கையைச் சேர்ந்த பிரேம்குமார் ஆகியோருக்கு தொடர்பிருந்தது தெரியவந்தது. இவர்களைப் பிடிக்க வனத் துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் வீரன், வெள்ளையன் ஆகியோரை வனத் துறையினர் கைது செய்து கடந்த 5ஆம் தேதி கோபி குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தினர். மூர்த்தி, பிரேம்குமார் ஆகியோரை வனத் துறையினர் தேடி வருகின்றனர்.
இதற்கிடையே முக்கிய எதிரியான வீரனை வனத் துறையினர் காவலில் எடுத்து விசாரித்தனர். வீரன் அளித்த வாக்குமூலத்தின் படி, கடம்பூர் 12ஆவது மைல் கல், மூங்கில் தூருக்கு அடிப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தந்தங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் கோபி குற்றவியல் நடுவர் மன்றத்தில் வீரனை ஆஜர்படுத்தி தந்தங்களை ஒப்படைத்தனர்.