ஏடிஎம் இயந்திரங்களில் நிரப்பும் பணத்தில் ரூ.55 லட்சம் கையாடல்: 4 பேர் கைது

ஈரோடு மாவட்டத்தில் ஏடிஎம் இயந்திரங்களில் நிரப்ப வேண்டிய பணத்தில் ரூ.55 லட்சத்தைக் கையாடல் செய்த 4 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் ஏடிஎம் இயந்திரங்களில் நிரப்ப வேண்டிய பணத்தில் ரூ.55 லட்சத்தைக் கையாடல் செய்த 4 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
  சேலம் விவேகானந்தா சாலையில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் குறிப்பிட்ட வங்கிகளுக்கு ஒப்பந்த முறையில் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் நிரப்பும் பணியில் ஈடுபட்டு வருகிறது.  இந்நிறுவனத்தின் கிளை மேலாளர் பி.சாம் மகேஷ்குமார், நிர்வாகப் பிரதிநிதி செந்தில்குமார் ஆகியோர் கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தனியார் வங்கியின் ஏடிஎம் மையங்களில் நிரப்பப்பட்ட பணத்தின் விவரங்களைத் தணிக்கை செய்தனர்.
  அப்போது ஏடிஎம் இயந்திரங்களில் பணம் குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு ஏடிஎம் இயந்திரங்களில் மொத்தம் ரூ.55,78,500 கணக்கில் வராமல் இருந்தது.
  இதுகுறித்து ஏடிஎம் மையங்களில் பணத்தை நிரப்பியபோது பொறுப்பில் இருந்த நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், பூலக்காடு, கணபதி நகரைச் சேர்ந்த ஜெகநாதன் மகன் அழகேசன் (29), சேலம் மாவட்டம், பள்ளப்பட்டி, மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பிரகாஷ் (31) ஆகியோரை அழைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
 இதில் ஏடிஎம் இயந்திரங்களில் நிரப்புவதற்காக கொண்டு சென்ற பணத்தை கையாடல் செய்துவிட்டதாகவும், அந்தப் பணத்தை நிறுவனத்தின் ஊழியரான சேலம் சாமிநாதபுரம், கெளரம்மா காலனியைச் சேர்ந்த மனோகரனின் மகன் முருகானந்தம் (29) என்பவரிடம் கொடுத்து வைத்துள்ளதாகவும் ஒப்புக்கொண்டனர்.
  அதன்பின்னர் கையாடல் செய்த பணத்தை திருப்பிக் கொடுத்துவிடுவதாக 3 பேரும் உறுதி அளித்தனர். இதனால் அவர்களிடம் இருந்து உறுதிமொழி பத்திரத்தை நிறுவனத்தின் அதிகாரிகள் எழுதி வாங்கிக்கொண்டனர். இதையடுத்து கடந்த பிப்ரவரி 29ஆம் தேதி வரை 8 தவணைகளாக அவர்கள் ரூ.5.12 லட்சத்தை மட்டும் திருப்பி கொடுத்தனர். மீதமுள்ள ரூ.50,66,500-ஐ கொடுக்கவில்லை.
  எனவே கையாடல் செய்த பணத்தை மீட்டுத்தரக் கோரி நிறுவனத்தின் கிளை மேலாளர் சாம் மகேஷ்குமார், ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.சக்தி கணேசனிடம் புகார் அளித்தார். மனுவை பெற்றுக்கொண்ட அவர் இதுகுறித்து விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கும்படி ஈரோடு மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாருக்கு  உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். 
  விசாரணையில் அழகேசன், பிரகாஷ், முருகானந்தம் ஆகியோர் கையாடல் செய்த பணத்தை சேலம் மாவட்டம், அரிசிபாளையம் தாமோதரன் வீதியைச் சேர்ந்த தங்கவேல் மகன் வினோத் (எ) திருமுருகன் (29) பெற்றது தெரியவந்தது.
 அதைத் தொடர்ந்து அழகேசன், பிரகாஷ், முருகானந்தம், வினோத் ஆகிய 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com