ஈரோடு மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வரி வசூலர் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு, கிருஷ்ணம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (40). எலக்ட்ரீஷியன். இவருக்கு சொந்தமான காலி இடம் அப்பகுதியில் உள்ளது. இந்த இடத்துக்கான வரியை செலுத்துவதற்காக குமார் அண்மையில் ஈரோடு, சூரியம்பாளையத்தில் உள்ள மாநகராட்சி முதலாம் மண்டல அலுவலகத்துக்கு சென்றார்.
அங்கு வரி வசூலராகப் (பில் கலெக்டர்) பணியாற்றி வரும் சூரியம்பாளையம், ஜவுளி நகரைச் சேர்ந்த மாணிக்கம் (50), வரி செலுத்தும் ரசீது வழங்க வேண்டுமென்றால் தனக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என குமாரிடம் கேட்டுள்ளார்.
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத குமார், இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீஸாரிடம் புகார் அளித்தார். போலீஸாரின் அறிவுறுத்தல்படி குமார், மாநகராட்சி மண்டல அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை காலை சென்றார். அங்கு வரி வசூலர் மாணிக்கத்திடம் குமார் ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரத்தைக் கொடுத்தார். அந்தப் பணத்தை மாணிக்கம் பெற்றபோது அங்கு ஏற்கெனவே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் அவரைக் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.