ஈரோடு மாநகரில் பல்வேறு திட்டப் பணிகளுக்கு பள்ளம் தோண்டப்பட்டுள்ள சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும் வேண்டும் என தமாகா கோரிக்கை விடுத்துள்ளது.
தமாகா ஈரோடு மத்திய மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் ஆறுமுகம், பொதுச்செயலாளர் விடியல் சேகர், இளைஞரணித் தலைவர் எம்.யுவராஜா, செயற்குழு உறுப்பினர் எஸ்.டி.சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தமாகா சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா வரும் ஜூலை 21ஆம் தேதி திருப்பூரில் நடைபெற உள்ளது. ஈரோடு மாவட்டத்திலிருந்து திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
ஜி.கே.மூப்பனார் பிறந்த நாள் விழாவை விவசாயிகள் தின விழாவாக கொண்டாட வேண்டும். உள்ளாட்சித் தேர்தலுக்காக ஈரோடு மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் உறுப்பினர்கள் தீவிர களப்பணியாற்ற வேண்டும்.
ஈரோடு மாநகர் பகுதியில் சாலைகள் சேதமடைந்துள்ளன. புதிய வளர்ச்சி திட்டங்கள் காரணமாக பள்ளங்கள் தோண்டப்பட்டு, சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. இந்த சாலைகளை சீரமைத்து தார் சாலை அமைக்க வேண்டும். வரும் காலத்தில் குடிநீர்ப் பிரச்னையை தீர்க்க மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும்.