பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ரூ.10. 69 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைகள் மற்றும் மாணவ, மாணவிகள் விடுதிகளை சென்னையில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்துவைத்தார்.
இதையொட்டி, பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினர் தோப்பு என்.டி.வெங்கடாசலம், கல்லூரி வளாகத்தில் குத்துவிளக்கேற்றி வைத்து, மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.
கல்லூரி வளாகத்தில் புதியதாக ரூ. 10.69 கோடி மதிப்பில், கூடுதல் ஆய்வகம் மற்றும் கருத்தரங்கு கூடம், மாணவியர், மாணவர் விடுதி, மனமகிழ் கூடம், பணிமனை, அமைப்பியல் ஆய்வுக் கூடம், மின் கட்டுப்பாட்டு அறை, மாணவர் கழிப்பறை, மாணவியர் கழிப்பறை, 3 வாகனங்கள் நிறுத்துமிடம், சாலை வசதி, லிப்ட் வசதி, சூரிய ஒளி மின்சார அமைப்பு, சுற்றுச்சுவர் மற்றும் அலங்கார நுழைவாயில் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
இதில், கல்லூரி முதல்வர் (பொறுப்பு) வரதகுரு, துணை முதல்வர் லோகநாதன், பெருந்துறை வேளாண் கூட்டுறவு விற்பனை சங்க துணைத் தலைவர் டி.டி.ஜெகதீஸ், பெருந்துறை ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் எஸ்.பெரியசாமி, க.செ.பாளையம் நகரச் செயலாளர் கே.எம்.பழனிசாமி மற்றும் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.