சத்தியமங்கலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் 8 ஆயிரம் மூட்டை பருத்தி ரூ.1.5 கோடிக்கு விற்பனையானது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பவானிசாகர், புஞ்சைபுளியம்பட்டி, காவிலிபாளையம், பெரியூர், உக்கரம், அரசூர், கெம்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பருத்தி பயிரிட்டுள்ளனர்.
விவசாயிகள் உற்பத்தி செய்யும் பருத்திப் பஞ்சுகளை விற்பனைக்காக சத்தியமங்கலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்துக்கு கொண்டு வந்து ஏல முறையில் விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில் விவசாயிகள் 8 ஆயிரம் மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்தனர். பருத்தியை ஏலம் எடுக்க கோவை, அன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர்.
இதில் ஒரு கிலோ பருத்தி ரூ.50 முதல் ரூ.60 வரை விலைபோனது. மொத்தம் 8 ஆயிரம் மூட்டை பருத்தி ரூ.1.5 கோடிக்கு விற்பனையானதாக கூட்டுறவு சங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.