பெருந்துறை பகுதியில் வாகனச் சோதனையில் போக்குவரத்து விதிகளை மீறியதாக கிரேன், கார் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், 50 பேரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்து வட்டாரப் போக்குவரத்து அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.
பெருந்துறை சுங்கச் சாவடி பகுதியில் பெருந்துறை வட்டாரப் போக்குவரத்து அதிகாரி வெங்கட்ரமணி மற்றும் ஆய்வாளர்கள் கண்ணன், சுகந்தி ஆகியோர் வாகன சோதனையில் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த கிரேன் ஒன்றை தடுத்து நிறுத்தி அதன் ஆவணங்களை சரி பார்த்தனர். இதில், வாகன காப்பீடு இல்லாமலும், உரிய ஆவணங்கள் இல்லாமலும் கிரேன் இயங்கி வந்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, கிரேன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அந்த வழியாக வந்த கார் ஒன்றை தடுத்து நிறுத்தி ஓட்டுநரிடம் விசாரணை நடத்தியதில், வேறொருவருக்குச் சொந்தமான காரை உரிய ஆவணங்கள் இல்லாமல் வாடகைக்கு ஓட்டி வந்ததும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, அந்தக் காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், போக்குவரத்து விதிகளை மீறியதாக கிரேன் மற்றும் காரை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதனை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டுச் சென்றனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் 24 ஆம் தேதி வரை நடத்தப்பட்ட வாகனச் சோதனையில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 50 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
தற்போது, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி பெருந்துறை மற்றும் சீனாபுரம், திங்களூர், விஜயமங்கலம், காஞ்சிக்கோவில் ஆகிய பகுதிகளில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டி வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.