மொடக்குறிச்சி அருகே காட்டுப்பாளையம் பிரிவு பகுதியில் தனியார் பேருந்து மோதியதில் இளைஞர் ஒருவர் திங்கள்கிழமை பலியானார்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், ஆனங்கூர் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் காளீஸ்வரன் (27). இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
இவர் தனது இருசக்கர வாகனத்தில் மொடக்குறிச்சி அருகே காட்டுப்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த தனியார் பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்தார். அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து மொடக்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.