ஈரோட்டில் ரயில் பயணிகளிடம் செல்லிடப்பேசிகளைத் திருடிய நபரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
ஈரோடு வழியாகச் செல்லும் ரயில்களில் பயணிகளின் செல்லிடப்பேசிகள் மற்றும் உடமைகள் திருடப்படுவதாக ரயில்வே போலீஸாருக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து, போலீஸார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், ரயில் நிலையத்தில் சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை திங்கள்கிழமை பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர் வைத்திருந்த செல்லிடப்பேசிகள் குறித்து விசாரிக்கையில் முன்னுக்குப் பின் முரணான தகவலை அளித்துள்ளார்.
விசாரணையில், புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை முத்துக்குளியைச் சேர்ந்த செந்தில்குமார் (40) என்பதும், அவர் வைத்திருந்த செல்லிடப்பேசி பயணியிடம் திருடப்பட்டது என்பது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸார் செந்தில்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.