ஈரோட்டில் வீட்டுமனை வாங்கித் தருவதாக கூறி ரூ.8 லட்சம் மோசடியில் ஈடுபட்டவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்டவர்கள் மனு அளித்துள்ளனர்.
ஈரோடு, மோசிக்கீரனார் வீதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசனிடம் செவ்வாய்க்கிழமை அளித்த புகார் மனு விவரம்:
ஈரோடு, வெண்டிபாளையத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், ரியல் எஸ்டேட் முகவராக இருப்பதாகவும், மாத தவணையில் வீட்டுமனைப் பட்டா வாங்கி தருவதாகவும் எங்களிடம் கூறினார். இதனை நம்பி தங்களது பகுதியைச் சேர்ந்த 10 பேர், ரூ.1,000 முதல் ரூ.5 ஆயிரம் வரை மாதத் தவணையில் பணத்தை செலுத்தினோம். இதுவரையில், மொத்தம் ரூ.8 லட்சத்து 60 ஆயிரம் செலுத்தி உள்ளோம்.
ஆனால், எங்களுக்கு வீட்டுமனை வாங்கித் தராமல் அந்தப் பெண் மோசடி செய்துவிட்டார். எனவே, அவர் மீதும், சம்பந்தப்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் உரிமையாளர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து எங்களது பணத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.