உயர் மின்கோபுரம் அமைக்கும் விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை ஏற்று பணிகளை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டனர்.
தமிழகத்தில் விவசாய நிலம் வழியாக உயர் மின்கோபுரப் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஈரோடு, சேலம் உள்பட 13 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தினர்.
ஆயினும், பல்வேறு இடங்களில் விளைநிலங்கள் வழியாக உயர் மின்கோபுரப் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதுதொடர்பாக உயர் மின்கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மின்கோபுரப் பாதை அமைக்கும் பணியை நிறுத்துமாறு இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் உயர் நீதிமன்ற உத்தரவை மீறி உயர் மின்கோபுரப் பாதை அமைக்கும் பணி நடந்து வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உயர் மின்கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கத்தின் கூட்டு இயக்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் 50-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர். உயர் மின்கோபுரப் பாதை அமைக்கும் பணியை உடனே நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி, ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் மனுவைச் சேர்த்தனர்.
இந்நிலையில் மதிமுக பொருளாளர் அ.கணேசமூர்த்தி ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து போராட்டக் குழுவினரைச் சந்தித்துப் பேசினார்.