பவானியை அடுத்த அம்மாபேட்டை அருகே குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் காலிக் குடங்களுடன் சனிக்கிழமை திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அம்மாபேட்டையை அடுத்த குருவரெட்டியூர், பெரியார் நகர் பகுதியில் கடந்த ஒரு மாதமாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் சிரமத்துக்குள்ளான அப்பகுதி மக்கள் இதுகுறித்து அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தும் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலிக் குடங்களுடன் வெள்ளித்திருப்பூர் - குருவரெட்டியூர் சாலையில் அமர்ந்து சனிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறித்து வந்த அம்மாபேட்டை போலீஸார், பொதுமக்களிம் பேச்சு நடத்தியதோடு, அதிகாரிகளுக்குத் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால், அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.