கோபி கலை, அறிவியல் கல்லூரியின் 51 ம் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு கல்லூரி முதல்வர் வி.தியாகராசு தலைமை வகித்தார். விழாவில் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பி.குழந்தைவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
விழாவில், தேசிய அளவில் விருது பெற்ற பேராசிரியர்கள், முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியர்களை சிறப்பு விருந்தினர், கல்லூரியின் ஆட்சிக்குழுத் தலைவர் பி.கருப்பணன், செயலர் மற்றும் தாளாளர் எம்.தரணிதரன் ஆகியோர் கெளரவித்தனர்.
மேலும் பல்வேறு பாடப் பிரிவுகளில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கும், தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
பரிசு பெற்ற மாணவர்கள், முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியர்களை கல்லூரி கல்வி முதன்மையர் ஆர்.செல்லப்பன் பாராட்டினார். வேதியியல் துறைத் தலைவர் வி.வி.ராஜூ நன்றி கூறினார்.
இதையடுத்து, மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் ஆட்சிக்குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.