கோபி அருகே வாகனச் சோதனையில் கணக்கில் வராத ரூ.2.20 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் மக்களவைத் தேர்தல் கண்காணிப்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருப்பூர் மக்களவைத் தொகுதியில் உள்ளடக்கிய கோபிசெட்டிபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் 3 பறக்கும் படையும், 3 கண்காணிப்புக் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.
இதில் கோபிசெட்டிபாளையம் திருப்பூர் சாலையில் காமராஜ் நகர் பகுதியில் பறக்கும்படை அதிகாரி அன்பழகன் தலைமையில் உதவி ஆய்வாளர் சதாசிவம் ஆகியோர் கொண்ட குழுவினர் வாகனச் சோதனையில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தனர். அப்போது, திருப்பூர் நோக்கிச் இறைச்சி கோழி பாரம் ஏற்றிச் செல்லும் வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் ஓட்டுநர் மணிகண்டன் என்பவரிடம் ரூ.2லட்சத்து 20 ஆயிரத்து 820 ரொக்கமும் இருந்துள்ளது. இதற்கான உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லை. இதையடுத்து, அந்தப் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் கோபி கோட்டாட்சியர் அசோகனிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் பகுதியில் செயல்பட்டு வரும் கோழிப் பண்ணையில் இருந்து இறைச்சிக்காக கோழி, காடை ஆகியவற்றை பெங்களூரு, ஒசூர் உள்ளிட்ட பகுதியில் உள்ள இறைச்சிக் கடைகளில் விற்பனை செய்தது மூலம் கிடைத்த பணத்தை கொண்டு வந்ததாக ஓட்டுநர் மணிகண்டன் தெரிவித்தார். ஆனால், அதற்கான விற்பனை ரசீது இல்லை என்பதால் பறிமுதல் செய்யப்பட்ட பணம் கரூவூலத்தில் ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.